Showing posts with label Malware. Show all posts
Showing posts with label Malware. Show all posts

நச்சு நிரல் (Antivirus) பாதுகாப்பு.

    நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களிடம் மேசைக்கணிணியோ (Desktop) அல்லது மடிக்கணிணியோ (Laptop) இருக்கும் என்று தெரிகிறது.  ஆனால் அது உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

    virus2உத்தியோக நடவடிக்கைக்காக மட்டுமே தேவை என்றிருந்த கணிணி, இப்போது வீட்டிலும் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறிக்கொண்டு வருகிறது. படிப்பு, பொழுதுபோக்கு, தகவல் சேகரிப்பு எனப் பல காரணங்களுக்காக இணையம் வாயிலாக கோப்புகள் தரவிறக்கம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால் இப்படித் தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் மூலமாகவும், இதை அனுமதிக்கும் தளங்கள் மூலமாகவும் computer virus என சொல்லப்படும் நச்சு நிரல் நம் கணிணிக்குள் புகுந்து துவம்சம் பண்ணிவிடும் என்ற உண்மையை பலரும் படித்திருப்பீர்கள். இன்னும் சிலருக்குச் சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம். இம்மாதிரி தரவிறக்கம் செய்ய அனுமதிக்கும் தளங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை என்று கண்டுபிடிப்பது நம் கையில் இல்லை.

    புதிதாக வாங்கிய கணிணியில் இணையத் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் தரவிறக்கம் செய்து நிறுவப்படுவது, உடனுக்குடன் அரட்டையடிக்க உதவும் instant messenger தான். ( உதா : Yahoo Messenger, gTalk, MSN Messenger, Skype etc etc). இந்த மென்பொருட்களில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் இதன்வாயிலாக உங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கை தேவை. காரணம், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் மற்றும் சுட்டிகளால் உங்கள் கணிணி நச்சு நிரலால் பாதிப்படையும் சாத்தியம் மிகமிக அதிகம்.

    பரந்து கிடக்கும் இணையத்தில், தளங்களின் பாதுகாப்புத் திறனை நம்மால் கணிக்க முடியாது. நாம் செல்லும் தளங்கள் எல்லாம் பாதுகாப்பானவை தானா என்ற ஆராய்ச்சியில் முனைந்துவிட்டால், தேடி வந்த விஷயம் காணாமல் போய்விடும், நடைமுறைக்கும் உதவாது. அப்படி என்றால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி?.

  1. உங்கள் கணிணியிலில் ANTI VIRUS நிறுவப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள். பிரபலமாக உபயோகத்தில் இருப்பது Norton, MaCafee, AVG, ClamWin, Kaspersky, போன்றவை. உங்கள் கணிணியில் மாறுபட்டு இருக்கவும் வாய்ப்பு உண்டு. சம்பந்தபட்ட Antivirus நிரலை அவ்வப்பொழுது புதுப்பித்து கொள்வது உசிதம்.

  2. மின் அஞ்சலுடன் இணைந்து வந்து தரவிறக்கம் செய்யப்பட்ட எல்லாக் கோப்புகளையும் கணிணியில் நிறுவியிருக்கும் Anti Virus மூலம் ஒரு முறை சோதனை செய்த பிறகு உபயோகிப்பது நல்லது. கோப்பை Right- click செய்தால் scan with [ ANTI VIRUS ] என்று வரும். இதை தேர்வு செய்தால், குறிப்பிட்ட கோப்பை மட்டும் சோதனை செய்து சில நொடிகளில் அந்தக் கோப்பு பாதுகாப்பானது தானா இல்லையா என்று சொல்லிவிடும்.

  3. Instant Messenger இல் பரிச்சயம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் சுட்டியை அல்லது கோப்பைப் பெறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பெரும்பாலான virus attack இப்படித் தான் பரவுகிறது. இதுமட்டுமல்லாது, இம்மாதிரியான தளங்கள் phising site ஆக இருக்கக்கூடும். அதாவது உங்களைக் குறித்த தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க மட்டுமே அமைக்கப்பட்ட போலித் தளங்கள். இவை பெரும்பாலும் பிரபல வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கு எண், Credit card password விவரங்களைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்களை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் சாத்தியமே அதிகம். Phisihng குறித்த அதிகப்படி விவரங்கள் இனிவரும் பதிவுகளில் சொல்லப்படும்.

    மேலே சொன்னவையெல்லாம் இனிமேல் நச்சுநிரல்களிடம் (virus) மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான யோசனைகள். ஒருவேளை இவற்றையும் தாண்டி சில சாமர்த்தியமான virus கணிணியில் குடியேறிவிட்டால் அல்லது ஏற்கனவே ஏதாவது நச்சுநிரல் (virus) உங்கள் கணிணியிலே கூடுகட்டிக் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தால் அதை எப்படிக் கண்டுபிடித்துச் சரி செய்வது? வாரம் ஒரு முறையாவது Anti virus நிரலை ஓடவிடவும். அந்த நேரத்திலே கணிணியை உபயோகிக்காமல் இருந்தால் எல்லாக் கோப்புகளும் முறையே சோதனை செய்யப்படும்.

    ஒருவேளை உங்கள் கணிணியில் Anti Virus நிறுவவில்லை என்றாலோ கணிணியில் இருக்கும் Anti Virus ல் சோதனை செய்தால் மட்டும் போதாது என்று தோன்றினாலோ இணையத்திலிருந்தே உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தலாம். இந்தச் சேவையை http://housecall.trendmicro.com/ என்ற தளம் இலவசமாக வழங்குகிறது. இது virusஐ மட்டுமில்லாது Spyware, malware எனப்படும் தகவல் திருட்டுப் பணியில் ஈடுபடும் நிரல்களையும் கண்டுபிடித்துவிடும். இம்மாதிரியான உளவு வேலை செய்யும் நிரல்களைக் குறித்த விவரங்களும், அவற்றைத் தடுத்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பதையும் வரும் பதிவுகளில் விவரமாகப் பார்க்கலாம்.

    http://housecall.trendmicro.com/ என்ற தளம் இம்மாதிரியான Spyware – Malwaresஐக் கண்டறிந்து நீக்க உதவும். இந்தத் தளத்திற்குச் சென்று Get HouseCall Free Scanஐத் தேர்வு செய்யவும். பிறகு வரும் திரைகளில் சொல்லிய படி செய்தால் உங்கள் கணிணி முழுவதுமாகப் பரிசோதனை செய்யப்படும். நீங்கள் இந்தத் தளத்திலிருந்து உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தும் போது மற்றத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். இன்னும் சொல்லப்போனால் கணிணியை உபயோகிப்பதையே தவிர்க்கவும். முதல்முறை இதைச் செய்யும்போது சோதனைக்கான நேரம் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. எனவே நேரம் குறித்துக் கவலைப்படவேண்டாம்.

    சோதனையின் முடிவில் உங்கள் கணிணியில் இருக்கும் கோப்புகளில் எத்தனை virusஆல் பாதிக்கப்பட்டுள்ளன, என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் உங்களுக்குச் சொல்லப்படும். ஆலோசனைப்படி முறையே அவற்றை நீக்கிவிட்டால் கணிணிப்பாதுகாப்புக்கு உண்டான முதல் கவசத்தைப் பெற்றுவிட்டதாகக் கருதுங்கள்.

    - தீபா கோவிந்த்

அந்தரங்கத் தகவல்களைத் திருடும் Malware.

மின் அஞ்சலுடன் இணைந்து வரும் கோப்புகளை Anti Virus கொண்டு சோதனை செய்த பிறகே அவற்றைத் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இது இணையத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் எல்லா கோப்புக்கும் பொருந்தும். அதுவும், "இலவச தரவிறக்க வசதி" என்று விளம்பரப்படுத்தும் தளங்களில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

Software எனப்படும் மென்பொருட்கள்தாம் நம் கணினியை இயக்கி வருகின்றன. MS Office ல் இருக்கும் Word, Excel, Power point ஐ தெரியாதவர்கள் இருக்க முடியாது. கணினியே கதி என்று இருப்பவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். Flash, silverlight, photoshop, Visual Basic, Oracle, என்று சொல்லிக்கொண்டே போகலாம். எண்ணிக்கையில் அடங்காது. உங்களை இணையத்தில் சஞ்சரிக்கச் செய்வதும் இந்த மென்பொருட்களே. இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் மென்பொருட்களை உருவாக்குவது மனித மூளையே. உயிர் காக்கும் பென்சிலின் ஆகட்டும், தலைமுறைகளை முடமாக்கின அணுகுண்டு ஆகட்டும் இரண்டுக்குமே மூல காரணம் இந்த மூளைதான்.

கணினிதுறையிலும் இந்த வாதம் பொருந்தும். நாம் தினம் உபயோகிக்கும் மென்பொருட்களை தயாரிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, நம்மை தொந்தரவு செய்யவே சிலர் மென்பொருள் தயாரித்து வெளியிடுவார்கள். இந்த மாதிரி (தீய) நோக்கத்துடன் வெளியிடப்படும் மென்பொருட்களைத் தான் Malware என்று சொல்கிறோம்

1. Malware என்றால் என்ன ?

தீங்கு செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்ட மென்பொருள் Malware என அழைக்கப்படும். உங்கள் அனுமதி இல்லாமல், உங்கள் கணினியிலிருந்து தகவல்களைச் சேகரிக்கவோ அழிக்கவோ பிறருக்கு அனுப்பவோ செய்வது இதன் வேலையாகும். தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகளில் பதுங்கி உங்கள் கணினியில் வந்திறங்கும்.

2. Spyware என்றால் என்ன ?

உங்கள் கணினியில் உளவாளியைப் போல் பதுங்கி இருக்கும். உங்களது நடவடிக்கையை கூர்ந்து கவனித்து உங்களுக்கு தெரியாமலேயே தன் எசமானுக்குத் தகவல்களை அனுப்பும். உதா: எம்மாதிரியான தளங்களை நீங்கள் அதிகம் பார்வையிடுகிறீர்கள், அத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (password), Credit card Number, Bank account Number போன்ற தகவல்களைச் சேகரிக்கும். Spyware இன் ஆதிக்கம் இருக்கும் கணினியில் வேகம் குறைவது, வழக்கத்துக்கு அதிகமான, தொடர்பேயில்லாத Pop up வருவது, ஓர் இணையமுகவரியைத் தட்டினால் தானாகவே வேறு முகவரிக்குப் போவது போன்ற புதிரான நடவடிக்கைகளைக் காணலாம்.

3. Adware என்றால் என்ன ?

இது நம் வீட்டுத் திண்ணையிலே கிடக்கும் பிட்-நோட்டீஸ் மாதிரி. அதாவது தானாகவே விளம்பரங்கள் வந்து குவியும். அதிலும் முக்கியமாக, விளம்பரங்களில் தட்டினால் விற்கப்படும் பொருளுக்கு 50% - 70% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கும். இம்மாதிரி நடந்துகொள்ளும் மென்பொருட்கள் Adware என அழைக்கப்படும். பூட்டிக்கிடக்கும் வீட்டில் பிட்-நோட்டீஸ் குவிந்து கிடப்பது போல, முறையே கணினியைச் சுத்தம் செய்யாவிட்டால், இம்மாதிரி Adwares இன் தாக்கமும் அதிகரிக்கும்.

4. Phishing என்றால் என்ன ?

Fishing என்றால் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, Phising என்றால், தூண்டில் போட்டுத் தகவல்களை உங்களிடமிருந்தே பெறுவது. உண்மையான வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலிதளங்கள்தாம் இம்மாதிரி முறைகேடான செயல்களின் அரங்கம்.

உதா: - உண்மையான ICICI வங்கியின் முகப்பு முகவரி http://www.icicibank.com/. இதே ICICI வங்கியின் Login தளமுகவரி https://infinity.icicibank.co.in என்று துவங்கும். கவனிக்க வேண்டியது முகவரியை மட்டுமன்று, முகவரிக்கு முன்னால் வரும் HTTP - HTTPS என்பதைத்தான். காரணம், திடீரென்று உங்களுக்கு " ICICI Bank" இலிருந்து வந்தது போல் தொற்றுவிக்கும் ஒரு கடிதம் வரும்.

" எங்களது வங்கியில் / தளத்தில் சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்கிறோம். அதன் காரணமாக உங்கள் பயணர் கணக்கைப் பாதுகாத்துக்கொள்ள கீழே இருக்கும் சுட்டியில் வங்கிக் கணக்கு எண் – கடவுச்சொல் – விலாசம் – credit card number போன்ற தகவல்களைத் தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்."

உண்மையான வங்கியிலிருந்து வந்தது போல் தோன்றும் இந்த அஞ்சலில் இருக்கும் சுட்டியைச் சொடுக்கினால், ICICI வங்கியின் தளத்தைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம் உங்களை வரவேற்க்கும். கூர்ந்து கவனித்தால், தள முகவரியில் HTTPS க்கு பதில் HTTP என்று இருக்கும்.

HTTPSHyper Text Transfer Protocol Secure

HTTP – Hyper Text Transfer Protocol

" Secure " என்பது இல்லாத தளங்களில் எக்காரணம் கொண்டும் உங்கள் Credit card தகவல்களை அல்லது Banking மற்றும் அந்தரங்கத் தகவல்களை அளிப்பதைத் தவிர்க்கவும். ஒரு முறை உங்கள் கடவுச்சொல் மற்றும் கணக்கு எண் கைமாறிவிட்டால், என்ன நடக்கும் என்பதை விவரிக்க முடியாது.

இம்மாதிரி வரும் அஞ்சல்களை எக்காரணம் கொண்டும் நம்பி விடாதீர்கள். நேரடியாக தொடர்புடைய அலுவலகம் செல்ல முடியுமென்றால், சிரமம் பார்க்காமல் போய் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவும். இது முடியாத பட்சத்தில், சம்பந்தபட்ட HTTPS தளத்துக்குச் சென்று, உதவிப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி எண் அல்லது Instant Messenger ID இருந்தால், நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். இதுவும் இல்லையென்றால், Contact Customer support என்பதைச் சொடுக்கி மேற்படி விவரங்கள் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

- தீபா கோவிந்த்